அன்பு பாராட்டல் (Appreciation)

Thank you

பாராட்டுகளில் தலைசிறந்த பாராட்டு அதுதான் அன்பு பாராட்டு. அன்புபாராட்டல் எனப்படுவது ஒருவர் நமக்கு செய்த நன்மையோ அல்லது அவரிடம் இருக்கும் நற்குணத்தையோ புகழ்ந்து பேசுவது. ஆனால் இன்று இதுபோன்ற நற்குணங்கள் மக்களிடம் குறைந்து கொண்டு வருகிறது. ஒருவர் செய்யும் தீமையையோ அல்லது அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கத்தையோ கண்டுபிடித்து குறை குத்தும் சொல்லாகவே நாம் அனைவரும் விரும்புகிறோமே தவிர அவரிடம் இருக்கும் நற்குணத்தை பற்றி நாம் பேசுவதே கிடையாது. பிறரிடம் இருக்கும் குறைகள் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறதே தவிர நிறைகள் நம் கண்களுக்கு தென்படுவதில்லை. இன்று பெரும்பான்மையான சண்டைகள் குறிப்பாக உறவுகளுக்குள் வரும் சண்டைகள் வரமுக்கிய காரணமே இந்த அன்புபாராட்டல் என்ற குணம் இல்லாமல் போனது தான். இதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மூலம் சொல்ல வேண்டும் என்றால் கணவன் மனைவிக்குள் வரும் சண்டையை எடுத்துக்கொள்ளுங்கள் கணவன் மனைவிக்கு பல நன்மைகளை செய்திருப்பான் கேட்டதை எல்லாம் வாங்கி தந்திருப்பான் ஆனால் அதைபற்றி எல்லாம் அவர் மனைவி ஒருநாளும் பெருமையாக பேசியிருக்க மாட்டார்கள்  என்னதான் இருந்தாலும் எங்க அப்பாவீடு போல வருமா என்று தான் கூறுவார்கள், ஆனால் என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு தவறை செய்திருப்பான் இது தான் வாய்ப்பு என்று அந்த தவறையே ஒருவாரம் முழுக்கச்சொல்லி சொல்லி காண்பித்து கணவனை நோகடிப்பார்கள். இந்த தவறை மனைவிமார்கள் மட்டும் தான் செய்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது கணவன்மார்களும் தான் மனைவிமார்கள் என்ன தான் கவனித்தாலும் அவர்களுக்கு வேண்டியதை எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து செய்தாலும் ஒருநாளும் அதில் நிறைவு அடைவதும் கிடையாது அவர்களை பாராட்டுவதும் கிடையாது  ஏதாவது ஒரு குறை கண்டுபிடிப்பதையே வேலையாக வைத்து கொள்வது.

 

ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பெரிதும் எதிர்பார்ப்பது என்னவென்றால்  யாரேனும் நம்மை பாராட்ட மாட்டார்களா யாரேனும் நம்மை பெருமையாக பேசமாட்டார்களா என்று தான் பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர் குறிப்பாக இதை தங்கள் எதிர்பாலினத்திடம் இருந்து பெறவே விரும்புகின்றனர். ஒரு ஆணை ஒரு பெண் பாராட்டினாலோ அல்லது ஒரு பெண்னை ஒரு ஆண் பாராட்டினாலோ அவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே கிடையாது என்று கூறலாம் ஆனால் இன்று நிலையோ வேறு, ஆண் என்றாலே பெண்னை நம்பாதே என்று பாட்டு பாட வேண்டும் என்றும் பெண் என்றாலே ஆணை நம்பாதே என்று கூச்சல் போட வேண்டும் போன்ற உளவியலை நம் மனதில் பதித்துவிட்டனர். பிறகு எப்படி இருபாலினத்திற்குள் புரிதல் உண்டாகும் ஒரு பாலினத்தின் மீது இன்னொரு பாலினத்திற்கு வெறுப்புணர்வு வன்மம் போன்ற குப்பைகளே வெளிப்படும் ஆகையால் தான் நாளுக்கு நாள் விவாகரத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கள்ளக்காதல் போன்ற செயல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.

 

அதாவது ஒருவர் முழுக்க முழுக்க உங்களுக்கு தீமை மட்டுமே செய்யும் நபராக கூட இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் அவரை அறியாமையே ஒரு நல்லதை உங்களுக்கு செய்திருப்பார் அல்லது போற்றும் படியான ஒரு நற்குணம் நிச்சையம் அவரிடம் இருக்கும். நீங்கள் அவரிடம் சென்று நீ அன்று எனக்கு செய்த நன்மையினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் நீ போற்றுதலுக்கு உரியவன் உன்னிடம் பல  நற்குணங்கள் உண்டு நீ மிகவும் நல்லவன் என்று அவனிடம் சென்று பேசி பாருங்கள் அதாவது அவனிடம் அன்பை பாராட்டி பாருங்கள் அதுநாள் வரை உங்களுக்கு தீமை மட்டுமே செய்தவன் படிப்படியாக நன்மை மட்டும் செய்பவனாக மாறி விடுவான். மாறாக உங்களுக்கு ஒருவன் நன்மை மட்டுமே செய்பவனாக இருப்பான் ஆனால் என்றோ ஒரு நாள் ஒரு தீமையை உங்களுக்கு செய்திருப்பான் நீங்கள் அவனிடம் சென்று அவன் செய்த தீமையை மட்டும் கூறி அவனை வசைபாடுனீர்கள் என்றால் என்ன ஆகும். அவன் நிச்சையம் வருத்தப்படுவான் என்னடா இது நான் இவனுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளேன். ஆனால் இவன் அதை பற்றி எல்லாம் ஒருநாளும் பெருமையாக பேசியது கிடையாது. ஆனால் நாம் தெரியாமல் செய்த தவறுக்கு இப்படி பேசி விட்டானே என்று மனம் வருந்துவார்கள் பிறகு என்ன ஆகும் நேற்று வரை உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்தவன் நாளை முதல் படி படியாக தீமைகளையும் செய்ய ஆரம்பிப்பான் அவனிடம் உள்ள நற்குணம் நாளுக்கு நாள் குறைய ஆரமித்துவிடும்.

 

ஒருவன் நமக்கு நல்லது செய்ய வேண்டுமா அல்லது தீயது செய்ய வேண்டுமா என்று முடிவு செய்வதே நாம் தான். இந்த அன்பு பாராட்டல் என்ற குணத்தின் மூலம் முற்களையும் பூக்களாக மாற்ற முடியும் கல்லையும் கரைய வைக்க முடியும். இந்த அன்புபாராட்டல் கிடைக்காமல் ஏங்கி  தவிப்பவர்கள் தான் பிற்காலத்தில் விரக்தி அடைந்து பயங்கரவாதம் போன்ற மக்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுகின்றனர்.

 

ஆக ஒருவரை பற்றி குறை மட்டுமே சொல்லி கொண்டு இருந்தால் அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் காலப்போக்கில் அவரிடம் இருக்கும் நற்குணங்கள் மறைந்து தீயவராக மாறிவிடுவார். அதை போல தான் ஒருவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவனிடம் இருக்கும் சில நல்ல விசயத்தை அன்பு கலந்த பாராட்டின் மூலம் வெளிப்படுத்தினால் போதும் காலப்போக்கில் அவனிடம் இருக்கும் தீய குணங்கள் படிப்படியாக குறைந்து நல்லவனாக மாறிவிடுவான்.

 

ஆக இந்த அன்புபாராட்டல் என்ற நற்குணத்தை மட்டும் அனைவரும் கடைப்பிடித்து விட்டால் நீதிமன்றத்திற்கு வேலை இருக்காது காவல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படும் இவ்வளவு ஏன் இந்த குருதியழுத்த தலைவலி போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை தயார் செய்யும் Corporate நிறுவனங்கள் எல்லாம் காற்றோடு கரைந்துவிடும்.

 

ஆக நோய்நொடி இன்றி குற்றம் அற்ற சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அனைவரிடத்திலும் அன்பை பாராட்டி பழகுங்கள் அவ்வன்பு பாராட்டுதலே உங்களை நலமோடும் வளமோடும் வாழ வைக்கும்……

You may also like

Leave a comment