உணர்ச்சிகள் இரண்டு விதம்

Expression

நம்முடைய உணர்ச்சி ஒன்று தான் ஆனால், அதை நாம் இரு விதங்களில் கையாளுகிறோம்.

 

எப்படி?

நாம் கோபப்படுகிறோம், இதனால் பல பிரச்சினைகளை, மன உளைச்சல்களை எதிர்கொள்கிறோம். ஒரு கட்டத்தில் நாம் கோபப்படுவதால் பெறுவதை விட இழப்பதே அதிகம் என்று உணர்கிறோம். எனவே கோபப்படுவதைக் குறைக்க / நிறுத்த நினைக்கிறோம்.

 

ஒரு கட்டத்தில் கோபப்படுவதை முடிந்தவரை குறைத்து விடுகிறோம். இதனால், விலகிச் சென்றவர்கள் நம்மிடையே அன்பாகப் பழகுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றமாக உள்ளது. ஆனால், இதில் ஒரு பிரச்சினை உள்ளது.

 

Negative Energy

உண்மையில் கோபத்தை மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதை நிறுத்துகிறோமே தவிர மனதினுள் இன்னும் கோபத்தில் தான் உள்ளோம். இது நமது உடல் நலனைப் பாதிக்கிறது. அதாவது Negative Energy நம்முடைய உடலைப் பாதிப்படைய செய்கிறது. பாதிப்படைய செய்கிறது என்றால், உடனடியாக உடல்நிலை சரி இல்லாமல் போவதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய உடல் நலனை நமக்குத் தெரியாமலே பாதிப்படைய செய்கிறது.

 

நாம் கோபப்படவில்லை என்று மற்றவர்களுக்குத் தெரிந்தாலும், நாம் அடக்கி வைத்துள்ள கோபத்தின் Negative Energy மற்றவர்களுக்குக் கடத்தப்படுகிறது. எனவே, துவக்கத்தில் கோபத்தை வெளிக்காட்டுவதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறும் நாம், நாளடைவில் மனதளவில் ஏற்படும் கோபத்தையும் தடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.

 

இது இயல்பாகவே நடைபெறும் என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார். இக்கட்டுரையை நான் எழுதுவதற்குக் காரணமே, இவர் கூறியது எனக்கு நடந்ததால் தான்.

 

அடுத்த கட்டம்

துவக்கத்தில் கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவதைக் கட்டுப்படுத்தினேன் ஆனால், உள்ளுக்குள் கோபமாகத்தான் இருந்தேன். சிலவற்றைப் பார்க்கும் போது கோபம் தானாகவே வரும், தடுக்க முடியவில்லை.

நம்முடைய அனுபவம் காரணமாக நாளடைவில் அடுத்த கட்டத்துக்கு நாமே முயற்சிப்போம், நம்மையறியாமல் அல்லது நமக்குத் தெரிந்தும். அது என்னவென்றால், ‘எதற்குத் தேவை இல்லாமல் கோபப்பட்டு?!‘ என்று புறக்கணிக்கத் துவங்கி விடுவோம்.

எடுத்துக்காட்டுக்கு நமக்குக் கோபத்தை வரழைக்கும் ஒரு செய்தியைப் படித்தால், நம்மை அவமானப்படுத்த வேண்டும் என்று கிண்டல் செய்பவர்களின் கருத்துகளைக் கண்டால் நாம் புறக்கணிக்கப் பழகி விடுவோம்.

 

அதாவது அவர்களின் கருத்துக்கு, விமர்சனத்துக்கு, கடுமையான சொல்லுக்கு, கிண்டலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து விடுவோம். எனவே, அவை நம்மைப் பாதிக்காது.

 

அதாவது ரஜினி ஒரு முறை சொன்ன கதை தான்.

புத்தர் செல்லும் வழியில் அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்தார்கள், திட்டினார்கள் ஆனால், அவர் அமைதியாக இருந்தார்.

சீடர்கள், ‘குருவே அவர்கள் இவ்வளவு பேசியும் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்ட போது, ‘அவர்கள் கொடுத்ததை (திட்டியதை) நான் எடுத்துக்கொள்ளவில்லையே!’

என்றாராம்.

 

அது போல நமக்குக் கோப உணர்ச்சிகள் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புறக்கணிக்கப் பழகிக்கொண்டால் அவை நம்மை எதுவுமே செய்யாது. நம் உடலில் Negative Energy தோன்றாது, உடல்நலனை பாதிக்காது.

 

எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டவர்கள், மனதளவிலும் முயற்சி செய்யுங்கள். இது தான் உண்மையான மாற்றம்.

You may also like

Leave a comment